மீட்சி..

பொழுது புலர்ந்து வெயில் சூடு கூட உடலில் தெரியவில்லை, குளிரென்றும் கூற முடியாது, காசிக்கு பீடிக்கட்டு தேவைப்பட்டது. முற்றத்திலுள்ள மாடுகளை அவிழ்த்துவிட்டு அறைக்குள் எதையோ வேகமாய் எடுக்க சென்றார்.
காசி — காசி விஸ்வநாதன் — ஒரே மகன் — கேட்டவுடன் கிடைக்காத பொருளில்லை. ஆங்கிலேய படை காலத்தில் வாழ்ந்தாலும் காசிக்கு அவர் தந்தை குதிரை வாங்கித்தந்த கதை ஊரறியும். மாடு பிடிப்பதிலும் தந்தையை போலவே வல்லவர். பாய்ந்து ஓடும் காளையை அதன் வேகத்திலேயே சென்று விரட்டிப்பிடிப்பதில் திறமைசாலி.
காலையிலிருந்தே பரபரப்பாய் தெரிந்தார் காசி, நேற்று கருப்பு சொன்ன வார்த்தைகள் போர்வைக்குள் வீசும் வெயில் போல தொல்லை செய்துகொண்டே இருந்தது.
“டேய் காசி, காட்டுல மான் மறுபடி நம்ம பக்கம் வந்திருக்கு, வேலைக்கு போறப்ப அங்கிட்டு பாத்தேன்”.
வேட்டை துப்பாக்கியை எடுத்துச்சென்று நாட்கள் பல ஆகியபோதும், இன்றும் காசியை அந்த துப்பாக்கி பலநாள் காணாத காதலியைப் போல் ஈர்த்துக்கொண்டே இருந்தது. கடைசி மகனுக்கு இவர் வீட்டை பார்க்காமல் வேலைக்கு செல்லாமல் வேட்டைக்கு மட்டும் செல்வது மற்ற குழந்தைகளை போலவே சற்றும் பிடிக்கவில்லை. வெளிப்படையாவே பலமுறை கோவத்தை காட்டியிருக்கிறான்.
பல வருடங்களாக குறி பார்த்துப் பழகியதால், மின்மினியாய் இடக்கண் துடித்துக்கொண்டே இருக்கும். வேட்டை என்றில்லாமல் பொழுபோக்கையும் மீறி பெருமைக்கான குறியீடாகவே மாறிய தருணங்களவை. தகப்பன் வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பமில்லாமல் இருந்தாலும் வேட்டையின் ரத்தத்தில் குளிப்பதை என்றுமே விரும்பினார்கள் பல்குகள் ஒவ்வொருவரும். முயலும், மானும் மட்டும் போதுமா வாழ்க்கை எனும் வானவில்லை ரசிப்பதற்கு? பொருளும், படிப்பும், நற்குணங்களும் வேண்டாமா?
மாடுபிடி வீரன், வேட்டையில் சிறந்தவன் என்ற பெயர்கள் சத்தமாக கூச்சலிட்டால் வீட்டின் அடுப்பு எறிந்துவிடுமா என்ன?
தாய் வீரம்மாள். வீரம் மட்டுமல்ல, பண்பும், குணநலன்களிலும், பத்து குழந்தைகளை வளர்த்ததில், அவளின் வீரம் இன்றும் வெளிப்படும். மாமா கணேசனை பண்டிகை காலங்களில் ஆவலோடு பார்த்திருந்த நாட்களை இன்றும் எண்ணி மகிழ்கிறார்கள் குழந்தைகள். ஊர் அம்பலத்தின் முதல் மகள். அப்பா வீட்டில் செல்வத்திற்கு குறைவில்லை.
காசியை மட்டும் குறை சொல்ல முடியாது, ஊர்ல பஞ்சமும் பசியும் எல்லை மீறிய காலங்கள். பேருந்து தூக்கத்தை போல அனைத்தையும் மறந்து மழையும் தூங்கியே போனது. குடும்பத்தைக் காக்க, முதல் நான்கு மகன்களும் தொலைதூரம் வேலைக்கு செல்ல முடிவு, ஆழ்ந்த பிரிவு துயரத்திலும், அனுப்ப வேண்டிய கட்டாயத்தை புரிந்து நடந்த வீரம்மாள் வீரத்தை நம்மால் கவனிக்காமல் செல்லமுடியவில்லை.
அனலான சென்னை அன்போடு அன்று வரவேற்கவில்லை, பல நாட்கள் வேலை தேடி ஆளுக்கொரு இடத்தில் வேலைக்கு சென்றனர். ஊரிலேயே தபால் வேலை வந்தவுடன், மன நிம்மதியுடன் தம்பி தங்கைகளை பார்க்க ஊருக்கே வந்துசேர்ந்தார் மூத்த மகன் வடிவேலு. தந்தையைப் போலவே முரட்டு குணம். முதல் மகனுக்கே உரிய மிடுக்கு குணம்.
இரண்டாம் மகன் சின்னையாவிற்கு, படிப்பதில் மிகுந்த ஆர்வம், எழுபது தாண்டினாலும் புத்தகங்களோடு எழுவது மாறவில்லை. கிண்டி அருகில் வேலை. கோவமும், அன்பும் சரிபங்கில் ஒரு பிள்ளை.
கந்தன் — கந்தசாமி — வீரம்மாளின் அன்பிற்கு உருவம் கொடுக்கவேண்டுமெனில் அது கந்தனைப்போலவே இருக்கும். என்றும் கந்தனை சாமி என்றே தாய் அழைத்தாள். காசியும் மாமனாரின் பெயர்ரென்பதால், இயற்பெயரைக் கூறி அழைத்ததே இல்லை.
முத்து — அன்றே கணித்துவிட்டனர் — ஒன்பது வயதில் டி கடைகளிலும், ஓட்டல்களிலும் காய்கறி நறுக்கும் வேலை. பார்த்தவர் பலர், ஆச்சர்யத்தோடு முத்து வெங்காயம் வெட்டுவதைப் பார்க்க ஓட்டலுக்கு வந்து செல்வர்.
நால்வரும் அவரவர் பங்கிற்கு, வீட்டிற்கு பணமும், தேவையானவற்றயும் செய்து வந்தனர். மடுவளவோ மலையளவோ, குடும்ப நிர்வாகத்தையும் வாழ்க்கையையும் நம்பிக்கை குறையாமல் பார்த்து வந்தார் வீரம்மாள்.
இன்றும் வீரம்மாளின் நினைவிலிருக்கும் அந்த காலை வேலையை கேட்டபின், யார் மனதிலும் அச்சாகவே பதிந்துவிடும். அன்றைய பொழுதை போக்கவே வழியில்லை, காற்றும் பஞ்சத்திற்கு பயந்து காலியான நெற்குறுதில் முழுவதுமாகக் குடிகொண்டது. குழந்தைகளின் பசி பற்றிய வேதனையும், பேசாத யோசனைகளின் வலியுடனும், ஈரமண்ணில் அமர்ந்த இறகைப்போல செய்வதறியாமல் இருந்தார் வீரம்மாள். சற்றுநேரத்தில், “ஆத்தா , கந்தன் பணமனுப்பிருக்கார்” சொன்ன தபால்காரனின் கரகரத்த குரலுக்கு குழலும் யாழும் தலைகுனிந்தே நின்றன.
எப்படி தெரிந்ததோ கந்தனுக்கு, உண்மையிலேயே “கந்தனுக்கு அரோகராதான்”.
தொடர்ந்து மீள்வோம்.
Subscribe to my newsletter
Read articles from Arvind directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.
Written by
